மனக்குமுறலை
பேனாமுனையின் மைத்துளியாய்
கொட்ட நினைக்கிறேன்
ஏனோ அவை கண்ணீர்த்துளியாய்
கசிந்துகொண்டிருக்கின்றன.
மனக்குமுறலை
பேனாமுனையின் மைத்துளியாய்
கொட்ட நினைக்கிறேன்
ஏனோ அவை கண்ணீர்த்துளியாய்
கசிந்துகொண்டிருக்கின்றன.
மரத்தின் மலர்கள்
உதிர்த்த நிழல்கள்
தோட்டம் முழுவதும்
குப்பையாய் மண்டிக்கிடந்தன
தோட்டக்காரனை கூவி
பெருக்கச் சொன்னேன்
என்னவாயிற்று!
சூரியன் சாய்ந்ததும்
குண்டுமணி குப்பையில்லை
இனி நிலவு வந்ததும்
மாண்டுபோன நிழல்கள் மீண்டுவிடும்
- சீனக்கவிஞர் ஸு ஷி (1037 – 1101)

உதித்த துளி மாதங்களில்
உறங்கிப்போன சோகம்
அடைக்கிறது காற்றை
ஏன் இப்படி? எனக்கு மட்டும்!
புதைக்கப்போன காட்டில்
சவக்கற்கள் காட்டியது
ஆயிரம் அற்பாயுள்களை!
விதிப்பயனை வியந்தவாறு
விதைநிலத்தை முத்தமிட்டு
மனவரி(லி)களைப் பொறித்தேன்!
"சருகுகளே! சத்தம் போடாதீர்கள்!
பிஞ்சிலே துஞ்சிய என் காதல்
இங்கு கண்மூடி உறங்குகிறது"!

அகநானூறறியாத பிரிவொன்றில்
வகையான வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் காதல் பூக்காடு!
உடலும் ஒட்டாத இக்காதலுக்கு
உன்னதங்கள் உண்டு!
காதலில் வளைவுகள் பொதுநியதி
தொலைவுகள் புதுநியதி!
விசைப் பலகையில்
இதயத்தின் இசைத்துடிப்பு
சுட்டெலியின் க்ளிக்குகளில்
முத்த மழைபொழிந்து
இறுதியாகும் இளவேனில்!
உறைந்த பிணமாய்
கணிப்பொறிமுன் தவம்கிடந்து
வெரித்தவிழியில் பனித்துளி!
அவள் உள்ளங்கை கதகதப்பு
என் கணிப்பொறிக்குமானது!
மதுவாக உள்நிறைந்த மாலைநேரங்கள்
மணித்துளியாய்ப் போனது!

பனி முட்டைகளாய்
முற்றத்தில் வீழ்ந்தபோது
வினைப் பின்னமில்லா
விடலைப் பருவத்திலே
முத்துக்களாய் சேகரித்தேன்!
சன்னலில் சாறலாய்
முத்தங்கள் பதித்தபோது
உடைந்த துளிகள்
உலர் உள்ளத்தை
நனைத்தது உணர்ச்சியால்!
தோட்டத்தில் தூறலாய்
பூவிதழில் பொதிந்தபோது
தழுவாத தருணங்கள்
எண்ணிய தவிப்புகளெத்தனை!
சாப்ளின் சொன்னதுபோல்
உன்னோடு உறவாடும்போது
உப்புநீர் உமிழும்
என்றும் என் கண்ணோடு!

செடியின் மடியில்
மலர்ந்த உங்கள்
மௌனங்களே மொழி
வார்த்தைக்கு வஞ்சனை!
அழகின் அமைதி
கைம்பெண் புன்னகை!
மலர்ச்சியின் ஒலி
கனவின் ஊமைத்தனம்!
மாலையில் தூக்கிலிட்டு
மரணத்தில் மடிந்து
இதழை இழந்து
இறப்பிலும் நிசப்தம்!
வெற்றிடத்தில் விஞ்சியது
மௌனம் மட்டுமல்ல
சிலநிமிட மணமும்தான்
முடிவில் நீயும் ஒரு
அழகியல் வெறுமை!!
('நச்' கவிதைப் போட்டிக்கு இதனை சமர்ப்பித்து, போட்டியில் பங்கெடுத்த பெருமையாவது கொள்கிறேன்!!)