Wednesday, February 17, 2010

துயரம்

மனக்குமுறலை
பேனாமுனையின் மைத்துளியாய்
கொட்ட நினைக்கிறேன்
ஏனோ அவை கண்ணீர்த்துளியாய்
கசிந்துகொண்டிருக்கின்றன.

Wednesday, February 10, 2010

மலர்களின் நிழல்கள்




மரத்தின் மலர்கள்
உதிர்த்த நிழல்கள்
தோட்டம் முழுவதும்
குப்பையாய் மண்டிக்கிடந்தன
தோட்டக்காரனை கூவி
பெருக்கச் சொன்னேன்

என்னவாயிற்று!
சூரியன் சாய்ந்ததும்
குண்டுமணி குப்பையில்லை
இனி நிலவு வந்ததும்
மாண்டுபோன நிழல்கள் மீண்டுவிடும்

-    சீனக்கவிஞர் ஸு ஷி (1037 – 1101)

Saturday, October 31, 2009

தேனீக்கள்





நீ...

ஊரெல்லாம் தேன்தேடி

உச்சாணியில் கூடுகட்டும்

ஓர் உழைக்கும் வர்க்கத்தை

உறிந்து குடிக்கும் சுரண்டல்வாதி!

ஆயிரம் அறைமேலே

ஆயிரமாயிரமாய் அமர்ந்த

கூட்டுக்குடித்தனத்தை

அடித்து அகதியாக்கிய இனவாதி!

மொந்தை நிறைய

தேன் இருந்தாலும்

நக்கிக் குடிக்கும் நாய்!

சுதந்திர சுரணையற்ற

உன்னால் சூறையாடப்பட்டு

சூன்யமாகிப் போனவை

சும்மாயிருக்க ஈக்களல்ல

தேனீக்கள்!!

Monday, August 18, 2008

கல்லறை தனிமை


New Page 1

மூச்சின்றி நகங்களால்

கல்லறையில் கீரிய

என் எண்ணம்!

புழுக்கள் தோய்ந்த

மிச்ச சதைநார்களில்

என் வெப்பம்!

உயிருடன் மூடப்பட்டு

குரல்வளை முறிந்த

என் கதறல்!

நிர்வாணமாய் இருளில்

யாருமற்ற பயத்தோடு

என் தனிமை!!

Tuesday, May 6, 2008

எனக்கான முத்தங்கள்


புன்னகித்த தருணங்கள்

எண்ணி - உன் வாசல்

கோலங்களின் புள்ளிகளோடு

மார்கழிப் பனித்துளிகளாய்

மரணித்துப் போன

நெஞ்சத்தின் நினைவுகள்,

உணர்வுத் துண்டுகளை

உயிர்கொண்டு விழுங்கியபோது

எனக்கான கயிற்றின்

முத்தங்கள் இதமாகியது!!

Monday, April 28, 2008

சத்தம் போடாதீர்!!

உதித்த துளி மாதங்களில்

உறங்கிப்போன சோகம்

அடைக்கிறது காற்றை

ஏன் இப்படி? எனக்கு மட்டும்!

புதைக்கப்போன காட்டில்

சவக்கற்கள் காட்டியது

ஆயிரம் அற்பாயுள்களை!

விதிப்பயனை வியந்தவாறு

விதைநிலத்தை முத்தமிட்டு

மனவரி(லி)களைப் பொறித்தேன்!

"சருகுகளே! சத்தம் போடாதீர்கள்!

பிஞ்சிலே துஞ்சிய என் காதல்

இங்கு கண்மூடி உறங்குகிறது"!

Sunday, April 20, 2008

ஈ-காதல்.காம்

அகநானூறறியாத பிரிவொன்றில்

வகையான வண்ணத்துப்பூச்சிகள்

பறக்கும் காதல் பூக்காடு!

உடலும் ஒட்டாத இக்காதலுக்கு

உன்னதங்கள் உண்டு!

காதலில் வளைவுகள் பொதுநியதி

தொலைவுகள் புதுநியதி!

விசைப் பலகையில்

இதயத்தின் இசைத்துடிப்பு

சுட்டெலியின் க்ளிக்குகளில்

முத்த மழைபொழிந்து

இறுதியாகும் இளவேனில்!

உறைந்த பிணமாய்

கணிப்பொறிமுன் தவம்கிடந்து

வெரித்தவிழியில் பனித்துளி!

அவள் உள்ளங்கை கதகதப்பு

என் கணிப்பொறிக்குமானது!

மதுவாக உள்நிறைந்த மாலைநேரங்கள்

மணித்துளியாய்ப் போனது!

ClickComments